புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 23 Sep 2017 9:00 PM GMT (Updated: 23 Sep 2017 2:10 PM GMT)

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தென்திருப்பேரை,

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, நவ திருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினவேந்தர் பெருமாள் கோவில், இரட்டை திருப்பதி அரவிந்தலோசனர் கோவில், சீனிவாச பெருமாள் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆகியவற்றில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

கோவில்களில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தரிசனம், திருமஞ்சனம் நடந்தது. உற்சவர்கள் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் பெரும்பாலான பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

புளியமரத்தை சுற்றி வந்து...

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் காலை முதல் இரவு வரையிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நம்மாழ்வார் அவதரித்த புளிய மரத்தை ஏராளமான பக்தர்கள் சுற்றி வந்து வழிபட்டனர். கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. நெல்லை, தூத்துக்குடியில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு ஒரே பஸ்சில் சென்று திரும்பி வரும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர்கள் அஜித், விசுவநாத், கார்த்திக் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.


Next Story