குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி வனப்பகுதியில் கொண்டு சென்று விட கோரிக்கை


குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி வனப்பகுதியில் கொண்டு சென்று விட கோரிக்கை
x
தினத்தந்தி 16 Oct 2017 10:45 PM GMT (Updated: 16 Oct 2017 10:17 PM GMT)

கிணத்துக்கடவில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். குரங்குகளை வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறையினர் முன் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில் மலை பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கிருந்தோ வழி தவறி 2 குரங்குகள் வந்துள்ளன. மலை பகுதியை சுற்றி ஏராளமான வீடுகள் உள்ளதால் இந்த குரங்குகள் கோவை-பொள்ளாச்சி மெயின்ரோட்டில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து உணவு பண்டங்களை எடுத்துகொண்டு அங்கும், இங்குமாக ஓடி செல்கின் றன. வீடுகளுக்குள் புகுந்தும் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அவதிபடுகிறார்கள்.

சாலையின் குறுக்கே செல்வதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு பலியாக வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கிணத்துக்கடவு பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் அடிக்கடி வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து செல்கிறது. குழந்தைகள் கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களையும் பறித்து செல்வதால் அவர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

மேலும் டீக்கடைகள், பேக்கரிகளில் புகுந்து உணவு பொருட்களை எடுத்து செல்கிறது. இதனால் கடை வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story