தமிழக, கர்நாடக பக்தர்கள் இணைந்து கொண்டாடிய தாளவாடி பீரேஸ்வரர் கோவில் சாணியடி திருவிழா


தமிழக, கர்நாடக பக்தர்கள் இணைந்து கொண்டாடிய தாளவாடி பீரேஸ்வரர் கோவில் சாணியடி திருவிழா
x
தினத்தந்தி 21 Oct 2017 11:00 PM GMT (Updated: 21 Oct 2017 9:52 PM GMT)

தமிழக, கர்நாடக பக்தர்கள் இணைந்து கொண்டாடிய தாளவாடி பீரேஸ்வரர் கோவில் சாணியடி திருவிழாவில் ஒருவருக்கொருவர் சாணம் வீசி மகிழ்ந்தனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்டாபுரம் மலைக்கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் 3-வது நாள் சாணியடி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி மகிழும் வினோத நிகழ்ச்சி நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சாணியடி திருவிழா நேற்று காலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சாமி வீதிஉலா நடந்தது. இதில் கழுதையின் மீது சாமியை வைத்து ஊர் குளத்தில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். கோவிலில் பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது ஆண்கள் சட்டை அணியாமல் கோவிலுக்குள் சென்று சாமியை வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான சாணியடி திருவிழாவை கொண்டாடும் விதமாக கோவிலுக்கு பின்புறம் தயாராக குவித்து வைக்கப்பட்ட பசுமாடுகளின் சாணத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்கள் ஒருவருக்கொருவர் சாணத்தை எடுத்து மாறி மாறி வீசிக் கொண்டனர்.

உடலில் சாணத்தை வீசுவதை பக்தர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர். ஆண்கள் சாணம் வீசியதை பார்த்த பெண்கள் கரவோசை எழுப்பி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்கள். இதையடுத்து பக்தர்கள் குளத்திற்கு சென்று நீராடிவிட்டு மீண்டும் பீரேஸ்வரரை வழிபட்டனர்.

தாளவாடி மலைக்கிராமம் அருகில் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களை பிரிக்கும் எல்லை பகுதி உள்ளது. இதனால் சாணியடி திருவிழாவை 2 மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடினார்கள். அவர்கள் வெவ்வேறு மாநிலத்தவர்கள் என்பதை மறந்து ஒருவர் மீது மற்றொருவர் அன்புடன் சாணத்தை வீசி விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள்.

பின்னர் சாலையில் சிதறி கிடந்த சாணத்தை விவசாயிகள் சேகரித்து தங்களது விளைநிலங்களுக்கு கொண்டு சென்று உரமாக பயன்படுத்தினர். இதன் மூலம் விவசாய பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து மகசூலை தரும் என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும்.

இந்த திருவிழா குறித்து கும்டாபுரத்தை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:-

கும்டாபுரம் பகுதியில் சாணம் குவிந்து கிடந்த குப்பைமேடு வழியாக மாட்டு வண்டி ஒன்று சென்றபோது திடீரென ரத்தம் கசிந்தது. இதுபற்றி கேள்விப்பட்டதும் ஆச்சரியம் அடைந்த ஊர்மக்கள் உடனடியாக குப்பை மேட்டை தோண்டி பார்த்தனர்.

அங்கு சிவலிங்கம் இருந்தது. அப்போது ஒரு சிறுவனின் கனவில் தோன்றிய சாமி, தீபாவளி பண்டிகை முடிந்த 3-வது நாள் சாணத்தில் இருந்து மீண்டு எழுந்ததின் நினைவாக சாணியடி திருவிழாவை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பாரம்பரியமாக எங்களது மூதாதையர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் சாணியடி திருவிழாவை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Tags :
Next Story