திண்டிவனம் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை முயற்சி


திண்டிவனம் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 1 Nov 2017 11:15 PM GMT (Updated: 1 Nov 2017 7:19 PM GMT)

திண்டிவனம் அருகே கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக சத்துணவு அமைப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே உள்ள வடசிறுவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 55). விவசாயி. இவரது மனைவி ஜெயவேணி(45). இவர் வெள்ளிமேடுபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் தனது மகள் திருமண செலவுக்காக சொத்து பத்திரங்களை அடகு வைத்து திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தார். அங்கு வட்டி அதிகமாக வசூலித்ததாக தெரிகிறது. இதனால் வட்டி கட்டமுடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார்.

இதுகுறித்து அவர் தன்னுடன் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளரான செம்பாக்கத்தை சேர்ந்த சந்திரபாபு(55) என்பவரிடம் தெரிவித்து தனக்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து சந்திரபாபு ரூ.20 லட்சத்தை தனியார் நிதிநிறுவனத்திடம் கொடுத்து ஜெயவேணியின் பத்திரங்களை மீட்டு அதனை அவரே வைத்து கொண்டார். தொடர்ந்து கொடுத்த பணத்திற்கான வட்டியை ஜெயவேணியிடம் கேட்டார். அதற்கு அவர் தனது வங்கி கணக்கில் மாதந்தோறும் வரும் சம்பளத்தை எடுத்து கொள்ளுமாறு கூறி தன்னுடைய ஏ.டி.எம். அட்டையை சந்திரபாபுவிடம் கொடுத்தார். அதன் மூலம் அவர் மாதந்தோறும் வட்டி பெற்று வந்தார்.

இந்த நிலையில் சந்திரபாபு தனக்கு வட்டியுடன் ரூ.30 லட்சத்தை உடனே தரவேண்டும் என்று ஜெயவேணியிடம் கேட்டுள்ளார். அவ்வாறு தரவில்லையெனில் என்னிடம் உள்ளே உனது சொத்து பத்திரங்களை விற்று பணத்தை எடுத்து கொள்வேன் என்று கூறியுள்ளார். இது குறித்து ஜெயவேணி தனது கணவர் சிங்காரத்திடம் கூறினார். இதனால் மனமுடைந்த சிங்காரம் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து ஜெயவேணி வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிக வட்டி வசூலித்ததாக சத்துணவு அமைப்பாளர் சந்திரபாபுவை கைது செய்தனர். மேலும் தனியார் நிறுவன ஊழியர் எத்தியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் வடசிறுவளூர் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story