விழுப்புரம் அருகே போலி டாக்டர் கைது


விழுப்புரம் அருகே போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2017 4:00 AM IST (Updated: 2 Nov 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் கிராமத்தில் மருத்துவ படிப்பு படிக்காமலேயே ஒருவர் கிளீனிக் வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பியர்லின் மேபல் ரூபமதி, தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று இரவு சம்பந்தப்பட்ட கிளீனிக்குக்கு விரைந்து வந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த கிளீனிக்கில் போலியான சான்றிதழ்களை வைத்து ஒருவர் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவர் விழுப்புரம் அருகே உள்ள பா.வில்லியனூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் விஸ்வநாதன்(வயது 40) என்பது தெரியவந்தது. மேலும் இவர் பி.காம். படித்து முடித்துவிட்டு எம்.பி.பி.எஸ். படித்தது போன்று போலியான சான்றிதழ்களை வைத்து கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வாணியம்பாளையத்தில் கிளீனிக் நடத்தி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அதிகாரிகள், வளவனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஸ்வநாதனை கைது செய்தனர். மேலும் கிளீனிக்கில் இருந்த மருந்து, ஊசிகள் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story