வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மீட்பு குழு தயார் போலீஸ் ஐ.ஜி. தகவல்


வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மீட்பு குழு தயார் போலீஸ் ஐ.ஜி. தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2017 10:30 PM GMT (Updated: 2 Nov 2017 7:01 PM GMT)

வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது என்று திருவாரூரில் போலீஸ் ஐ.ஜி. அருள்செல்வம் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் மழை கால மீட்பு பணிகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் ஐ.ஜி. அருள்செல்வம் (பயிற்சி) தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் முன்னிலை வகித்தார். அப்போது மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்த பொதுமக்களை மீட்பது குறித்து தேவையான ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர் போலீஸ் ஐ.ஜி. அருள்செல்வம் மழை காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் உள்ளன. இதற்காக திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 5 போலீஸ் உட்கோட்ட அளவில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில், நிலைய போலீசார், ஆயுதப்படை போலீஸ் மற்றும் ஊர்காவல் படையினர் கொண்ட மீட்பு குழு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

மேலும் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள திருவாரூர் தியாகராஜர் கோவில், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில், முத்துப்பேட்டை கடலோர காவல் படை ஆகிய 3 இடங்களில் பைபர் படகு, மீட்பு பணிக்கான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் மழை வெள்ள பாதிப்பு குறித்து 24 மணி நேரம் செயல்படும் காவல் கட்டுபாட்டு அறை 83000 87700 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். 

Next Story