மழை, வெள்ள பாதிப்பை சரிசெய்யவில்லை தமிழக அரசு செயலற்ற நிலையில் உள்ளது டி.டி.வி.தினகரன் பேட்டி


மழை, வெள்ள பாதிப்பை சரிசெய்யவில்லை தமிழக அரசு செயலற்ற நிலையில் உள்ளது டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 2 Nov 2017 11:15 PM GMT (Updated: 2 Nov 2017 8:21 PM GMT)

மழை, வெள்ள பாதிப்பை சரிசெய்யாமல் தமிழக அரசு செயலற்ற நிலையில் உள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

திருச்சி,

தமிழ்நாடு, மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத மாநிலமாக உள்ளது என்று கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். அவர் ஒரு மூத்த தலைவர். அவர் கூறும் கருத்து சரியானது தான். தமிழ்நாட்டில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, சில சமயங்களில் 3 நாட்களில் பெய்து விடுகிறது. ஆனால் அதற்கு அரசு எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆறு, ஏரி குளங்களை தூர்வார எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாக பாதித்துள்ளது. மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதனை சரிசெய்யாமல் அரசு செயலற்று போய் உள்ளது. ஆட்சியாளர்கள் மக்கள்நலன் பற்றி கவலைப்படாமல் ஆட்சி நீடித்தால் மட்டும் போதும் என்ற மனநிலையுடன் உள்ளனர். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என கவர்னரிடம் 18 எம்.எல்.ஏக்கள் மனு கொடுத்தார்கள். அப்படி என்றால் மற்ற அமைச்சர்கள் மீது அதிருப்தி இல்லையா என்பது தவறு. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம்.

மக்கள் நலனைப்பற்றி கவலைப்படாத இந்த அரசு ஜெயலலிதா அரசே இல்லை. எனவே விரைவில் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் ஓயமாட்டோம். ஓ.பன்னீர்செல்வம் பதவி இல்லாதபோது நடந்துகொண்ட விதத்தால் தான் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்ததில் 425 ஆவணங்கள் போலியானவை.

எனவே இதில் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக கால அவகாசம் கேட்டுள்ளோம். இரட்டை இலை சின்னம் சட்டப்படி எங்களுக்கு தான் கிடைக்கும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் குறுக்கு வழியில் இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சிக்கிறார்கள். சட்டப்படி போராடி இரட்டை இலையை நாங்கள் மீட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார்.

டி.டி.வி. தினகரன் திருச்சி மாவட்டம், துறையூரில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு இரவு பெரம்பலூர் வழியாக காரில் சென்னை சென்றார். அவருக்கு பெரம்பலூர் அருகே செஞ்சேரி பகுதியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் எடப்பாடி அணியினர் கூத்தடிக்கின்றனர். இதனால் எம்.ஜி.ஆர். பெயருக்கு கெட்டபெயர் ஏற்படுத்தி வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக நான் டெல்லிக்கு சென்று பா.ஜ.க. தலைமையை சந்திக்கவுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை. மேலும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் 3 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெற்றால் எடப்பாடி அணியினர் கண்டிப்பாக இந்த 3 பேர் கொண்ட அமர்வுக்கு அப்பீல் கேட்பார்கள். அதற்கு வேலை இல்லாமல் போய்விட்டது. எடப்பாடி அணியில் உள்ள அனைவரும் வாய்க்கு வந்தது போல பேசி வருகின்றனர். என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஜெயலலிதாவை குறை சொல்லும் அளவுக்கு பேசுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்பு அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story