100 கடைகளில் தொழிலாளர் அதிகாரிகள் ஆய்வு 4 வணிகர்களுக்கு அபராதம்; தராசு- எடைக்கற்கள் பறிமுதல்


100 கடைகளில் தொழிலாளர் அதிகாரிகள் ஆய்வு 4 வணிகர்களுக்கு அபராதம்; தராசு- எடைக்கற்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Dec 2017 10:45 PM GMT (Updated: 13 Dec 2017 8:58 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 100 கடைகளில் தொழிலாளர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது மறுமுத்திரையிடப்படாத தாராசுகள், எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 வணிகர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

சென்னை தொழிலாளர் ஆணையர் பாலசந்திரன் உத்தரவுப்படி, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி திவ்யநாதன், திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் ராதாகிருஷ்ணபாண்டியன், துணை ஆணையர் வேலாம்பிகை ஆகியோர் அறிவுரைக்கிணங்க தஞ்சை தொழிலாளர் ஆய்வாளர் கவிஅரசு தலைமையில் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கும்பகோணம் பஸ் நிலையம், பெரியகடைத்தெரு, மீன்மார்க்கெட், மகாமககுளம் மற்றும் அதனை சுற்றி உள்ள சுவீட் கடை, தெருவோர பழக்கடைகள், பூக்கடைகள் மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் துணை ஆய்வாளர்கள் சுபாஷ்சந்திரன், மின்னல்கொடி, உதவி ஆய்வாளர்கள் அறிவின்செல்வம், பாலமுருகன், மகாலட்சுமி, ராஜா, எழிலரசன், வசந்தகுமார், முத்திரை ஆய்வாளர்கள் கலைமதி, சரவணன், அருள்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது மறுமுத்திரையிடப்படாத மற்றும் உரிய ஆவணங்களின்றி உபயோகப்படுத்தப்பட்டு வந்த 10 எலக்ட்ரானிக் தராசுகள், 20 மேஜை தராசுகள், 9 விட்டத்தராசுகள் மற்றும் 50 கிராம் முதல் 5 கிலோ வரையிலான 137 எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

4 வணிகர்களுக்கு அபராதம்

உரிய காலத்தில் மறுமுத்திரையிடாமல் எடையளவுகளை பயன்படுத்திய மற்றும் மறுபரிசீலனை சான்றினை கடையில் வைக்காதது ஆகிய முரண்பாடுகளுக்கான 4 வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உரிய காலத்தில் மறுமுத்திரையிடப்படாமல் எடையளவுகளை பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரமும், பொட்டலப்பொருட்கள் மீது உரிய அறிவிப்புகளின்றியோ, குறிப்பிடப்பட்ட விலையை விட கூடுதலாக விற்கும் வணிகர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரையும் அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் ஆய்வாளர் கவிஅரசு தெரிவித்துள்ளார்.


Next Story