ஒகி புயலால் பாதிப்பு: ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு, திருமாவளவன் வலியுறுத்தல்


ஒகி புயலால் பாதிப்பு: ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு, திருமாவளவன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2017 11:00 PM GMT (Updated: 17 Dec 2017 8:56 PM GMT)

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசை திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

தென்காசி,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று தென்காசிக்கு வந்தார். அவர், தனது கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர், எத்தனை பேர் இறந்துள்ளனர்? என்ற தகவலை அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. இதில் முறையான கணக்கெடுப்பு இல்லை. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் மெத்தன போக்கே காரணமாகும். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ரூ.50 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடா அதிகளவில் நடக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே ஆர்.கே.நகரில் பண பட்டுவாடா தொடர்பாக எந்த வேட்பாளர் மீது புகார் வருகிறதோ, அந்த வேட்பாளரை தமிழக தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

பேட்டியின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். 

Next Story