தண்ணீர் லாரிக்கு அடியில் படுத்து இருந்தவர், தலை நசுங்கி சாவு யார் அவர்? போலீஸ் விசாரணை


தண்ணீர் லாரிக்கு அடியில் படுத்து இருந்தவர், தலை நசுங்கி சாவு யார் அவர்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 Dec 2017 10:30 PM GMT (Updated: 21 Dec 2017 7:50 PM GMT)

டிரைவர் கவனிக்காமல் பின்னோக்கி எடுத்ததால் தண்ணீர் லாரிக்கு அடியில் படுத்து இருந்த வாலிபர், தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி, 

மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன்(வயது 40). தண்ணீர் லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு மதுரவாயல், மெட்ரோ நகர், 4-வது அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தண்ணீரை இறக்கி விட்டு, லாரியை ஓரமாக நிறுத்தி இருந்தார்.

அப்போது அந்த வழியாக குடிபோதையில் வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அந்த தண்ணீர் லாரிக்கு அடியில் படுத்துக்கொண்டார். இதனை கவனிக்காத டிரைவர் முருகன், லாரியை பின்னோக்கி எடுத்தார்.

தலை நசுங்கி சாவு

இதில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் அங்கு படுத்து கிடந்த வாலிபர், தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான வாலிபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியானவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தண்ணீர் லாரி டிரைவர் முருகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story