தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்


தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 Dec 2017 10:45 PM GMT (Updated: 21 Dec 2017 7:51 PM GMT)

பாதாள சாக்கடை திட்டத்துக்காக, தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

போடி,

போடி நகராட்சியில், ரூ. 71 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் 95 சதவீத பணிகள் முடிந்து விட்டன. சாலை காளியம்மன் கோவில் முன்பும், போடி மயான சாலை அருகிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்பகுதியில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு கழிவுநீரை கொண்டு செல்ல, மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ராட்சத குழாய்கள் பதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம், கடந்த 6 மாதத்துக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் அனுமதி கேட்டது. தற்போது குழாய் பதிக்க நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளித்துள்ளது.

இதன் எதிரொலியாக, போடி அரசு மருத்துவமனையில் இருந்து போஜன்பார்க் வரையிலான 938 மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதன் ஆய்வு செய்தார்.

பணியை துரிதமாகவும், தரமாகவும் மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார். இது குறித்து நகராட்சி ஆணையாளர் கூறும்போது, இன்னும் 6 மாத காலத்தில் அனைத்து பணிகளையும் முடித்து பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தி குறைந்து விடும். கழிவுநீரை சுத்திகரித்து மறுபடியும் விவசாயத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் சரவணக்குமார், உதவி பொறியாளர் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story