அரசு பள்ளி மாணவர்கள் மோதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


அரசு பள்ளி மாணவர்கள் மோதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2018 10:15 PM GMT (Updated: 19 Feb 2018 9:11 PM GMT)

கறம்பக்குடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால், வகுப்புகள் புறக்கணிக்கப்பட்டு போராட்டம் நடந்தது.

கறம்பக்குடி,

கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1700 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு படித்து வரும் மாணவர்களில் இருதரப்பினருக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14-ந்தேதியும் ஒரு தரப்பு மாணவர்கள், மற்றொரு தரப்பை சேர்ந்த 3 மாணவர்களை தாக்கினர். இதுகுறித்து அந்த தரப்பு மாணவர்கள் மழையூர் போலீசில் புகார் செய்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று பள்ளி தொடங்கியுடன் ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது குறிப்பிட்ட தரப்பு மாணவர்கள் தொடர்ந்து தங்களை தாக்கி வருவதாகவும், ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறி, இதனை பள்ளி நிர்வாகம் கண்டிக்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த மழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகம் மற்றும் போலீஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story