அண்டாப்ஹில்லில் மாடி வீடு இடிந்து 5 பேர் காயம்


அண்டாப்ஹில்லில் மாடி வீடு இடிந்து 5 பேர் காயம்
x
தினத்தந்தி 24 Feb 2018 11:13 PM GMT (Updated: 24 Feb 2018 11:13 PM GMT)

அண்டாப்ஹில்லில், மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மும்பை,

மும்பை அண்டாப்ஹில் சங்கம்நகர், பரனிநாக்கா பகுதியில் உள்ள மாடி வீடு ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில், அந்த வீட்டில் வசித்து வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி மரண ஓலம் எழுப்பினர். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த சிறுவன் ஒருவனை மீட்டனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த மேலும் 4 பேரை மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக சயான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் நடத்திய விசாரணையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்கள் அதே கட்டிடத்தில் வசித்து வந்த முகமது சலீம்(வயது46), கேசர்தேவி(34), ஜித்தேஷ்(13), பாவேஷ்(9), ஜிகார்(6) ஆகியோர் ஆவர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story