மாவட்டம் முழுவதும் 23 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இல்லை


மாவட்டம் முழுவதும் 23 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இல்லை
x
தினத்தந்தி 8 March 2018 11:56 PM GMT (Updated: 8 March 2018 11:56 PM GMT)

வேலூர் மாவட்டம் முழுவதும் 23 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இல்லை என்று மகளிர் தின விழாவில் கலெக்டர் ராமன் கூறினார்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை ஒன்றியம் ஆத்தூர்குப்பம், வெலக்கல்நத்தம் மற்றும் நாட்டறம்பள்ளி ஒன்றியம் மல்லகுண்டா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மகளிர் தின விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மல்லகுண்டாவில் நடந்த விழாவில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-

உலக மகளிர் தின விழாபெண்கள் தங்களது சேவையை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. பெண்கள் அனைத்து துறையிலும் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். மல்லகுண்டா பகுதியில் திறந்தவெளி கழிப்பறை இல்லாத வகையில் உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 4½ லட்சம் வீடுகள் உள்ளன. இதில் 23 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இல்லாமல் இருக்கிறது. வருகிற 31-ந் தேதிக்குள் வேலூர் மாவட்டம் திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

பெண்கள் தங்களது குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும். இந்நாளில் பெண்கள் தங்களது சேவையை உணர்த்தும் வகையில் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, நாட்டறம்பள்ளி தாசில்தார் பிரபுகணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜி, குணசேகரன், வேலூர் பாரத தூய்மை தூதர் சந்தானலட்சுமி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி எழுத்தர் குமரேசன் நன்றி கூறினார். 

Next Story