அ.குமரெட்டியபுரத்தில் பரபரப்பு: ஆழ்துளை கிணற்றை சீரமைக்க 2-வது நாளாக மக்கள் எதிர்ப்பு


அ.குமரெட்டியபுரத்தில் பரபரப்பு: ஆழ்துளை கிணற்றை சீரமைக்க 2-வது நாளாக மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 April 2018 10:15 PM GMT (Updated: 3 April 2018 5:45 PM GMT)

தூத்துக்குடி அருகே அ.குமரெட்டியபுரத்தில் ஆழ்துளை கிணற்றை சீரமைக்க 2-வது நாளாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கிராமமக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உதவி கலெக்டர் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீர் மாதிரிகளை சேகரித்து சென்றனர். நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் அதிகாரிகள் வந்து ஆள்துளை கிணற்றை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று ஓட்டப்பிடாரம் தாசில்தார் நம்பிராயர், யூனியன் ஆணையாளர் சிவபாலன், தனி அலுவலர் முத்துக்குமார் மற்றும் அலுவலர்கள் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள அடிபம்புகளை அகற்றி, ஆழ்துளை கிணற்றை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள முயன்றனர்.

இதை அறிந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்கள் அங்கு திரண்டு வந்த னர். அவர்கள் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து தனி அலுவலர் முத்துக்குமார் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அ.குமரெட்டியபுரத்தை சேர்ந்த மகேஷ், சுந்தரமூர்த்தி, செல்வராசு மற்றும் கிராம மக்கள் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், குழாய்களை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story