காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 4 April 2018 10:15 PM GMT (Updated: 4 April 2018 6:23 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 845 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இதே கோரிக்கைக்காக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 5 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலையில் திரண்டு வந்தனர். அப்போது காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அந்த ரெயிலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், துணை செயலாளர்கள் சவுரிராஜன், ராமசாமி, பொருளாளர் கலியமூர்த்தி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், அப்பாவு, சின்னசாமி உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் சின்னசேலத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ. தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் உதய சூரியன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.-அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த 365 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டிவனம் ரெயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மயிலம் எம்.எல்.ஏ. டாக்டர் மாசிலாமணி, திண்டிவனம் எம்.எல்.ஏ. சீத்தாபதி சொக்கலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், செந்தமிழ்செல்வன், மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார், டாக்டர் சேகர், வக்கீல்கள் அசோகன், அருணகிரி, ஒன்றிய செயலாளர்கள் ஓலக்கூர் ராஜாராம், மயிலம் மணிமாறன், வல்லம் அண்ணாதுரை, செஞ்சி விஜயகுமார், மேல்மலையனூர் நெடுஞ்செழியன், காங்கிரஸ் நகர தலைவர் விநாயகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், செல்வசீமான், ம.தி.மு.க. ஏ.கே.மணி, மனிதநேய மக்கள் கட்சி முகம்மது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை நகர் ரெயில் நிலையத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 70 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 60 பேரும் கைது செய்யப்பட்டனர்.

காவிரி பிரச்சினைக்காக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 5 இடங்களில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 845 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story