விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களை விடுவிக்க கோரி டி.டி.வி.தினகரன் கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகை


விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களை விடுவிக்க கோரி டி.டி.வி.தினகரன் கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகை
x
தினத்தந்தி 6 April 2018 11:36 PM GMT (Updated: 6 April 2018 11:36 PM GMT)

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களை விடுவிக்க கோரி டி.டி.வி.தினகரன் கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி பொன்மலைப்பட்டி அருகே உள்ள கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 36). இவர் கடந்த 3-ந் தேதி பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொன்மலை டீசல் காலனியை சேர்ந்த சிவக்குமார் (42) மற்றும் அவரது நண்பர்கள் பாலசந்தரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து பாலசந்தரும், அவரது மனைவியும் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் நேற்று காலை சிவக்குமாரின் தம்பிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வருகிறது என புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சிவக்குமாரின் தம்பிகளான ராஜ்குமார், சுரேந்தர் மற்றும் ஆனந்த் ஆகிய 3 பேரையும் போலீஸ் துணை கமிஷனர் பார்க்க வேண்டும் என்று கூறி அழைத்துள்ளார். 3 பேரும் வந்து பார்த்துள்ளனர். இந்நிலையில் 3 பேரையும் கைது செய்து விசாரிக்கும் படி பொன்மலை போலீ சாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து போலீசார் 3 பேரையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று, பொய் வழக்கு போட்டதாக கூறி 3 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பொன்மலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அந்த 3 பேரில் ராஜ்குமார் என்பவர் டி.டி.வி. தினகரன் கட்சியில் 36-வது வட்ட செயலாளராக இருக்கிறார். இதனால் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றதை அறிந்த அந்த கட்சியினரும் பொன்மலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட னர். இதனையடுத்து பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை, 3 பேரையும் விடுவித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறினர். இதன் பின் விசாரணைக்கு அழைத்து வந்த 3 பேரில் ராஜ்குமார் மற்றும் அவரது தம்பியான சுரேந்தர் ஆகிய இருவரிடமும், நான் இனிமேல் எந்த பிரச்சினைக்கும் செல்ல மாட்டேன் என்று கூறி ஒரு பேப்பரில் எழுதி வாங்கி விட்டு இருவரையும் விடுவித்தனர். ஆனால் மற்றொருவரான ஆனந்தை மட்டும் தொடர்ந்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story