காவிரி பிரச்சினைக்காக நடக்கும் மாணவர்கள் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்க தமிழக அரசு முயற்சி


காவிரி பிரச்சினைக்காக நடக்கும் மாணவர்கள் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்க தமிழக அரசு முயற்சி
x
தினத்தந்தி 15 April 2018 11:00 PM GMT (Updated: 15 April 2018 7:02 PM GMT)

காவிரி பிரச்சினைக்காக நடக்கும் மாணவர்கள் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்க தமிழகஅரசு முயற்சி செய்கிறது என்று, தஞ்சையில் வைகோ கூறினார்.

தஞ்சாவூர்,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ம.நடராஜன் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி பழ.நெடுமாறன் தலைமையில் நடந்து இருக்கிறது. உன்னத போராளி படத்தை திறந்து வைக்கக்கூடிய வாய்ப்பு என் வாழ்வில் கிடைத்த அரிய வாய்ப்பு. ஒரு காலத்திலும் காவிரி மேலாண்மை வாரியத்தை நரேந்திரமோடி அரசு அமைக்காது. அமைக்கபோவதும் இல்லை. தமிழ்நாட்டை, தமிழக மக்களை தொடர்ந்து மத்தியஅரசு ஏமாற்றி வருகிறது.

மாணவர்கள் போராட்டம், மற்ற போராட்டங்களை எல்லாம் அடக்குமுறையை பயன்படுத்தி, அச்சுறுத்தி ஒடுக்க வேண்டும் என்று தமிழகஅரசு முடிவு செய்துள்ளது என்று இப்போது கேள்விப்படுகிறேன். கேடு வரும் பின்னே, மதிகெட்டு வரும் முன்னே. இந்த அடக்கு முறையை எல்லாம் பயன்படுத்த நினைக்காதீர்கள். கொதி நிலையில் தமிழகம் இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகம் செய்த மத்தியஅரசை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வஞ்சகத்திற்கு துணை போன சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, ஆயிரம் அடிக்கு கீழே குழிதோண்டி நீதியை புதைத்துவிட்டார்.

மேகதாது, ராசிமணலில் கர்நாடகத்துக்காரனை அணை கட்ட வைத்து, வேண்டும் என்றே மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவிடாமல் செய்து இந்த பகுதியை பஞ்ச பிரதேசமாக, பாலைவனமாக ஆக்கிவிட்டு, அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள், பா.ஜனதா நிறுவனங்கள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.

காவிரி டெல்டா பகுதிகளை எத்தியோபியாவாக, நைஜிரியாவாக மாற்ற முனைந்து இருக்கிற இந்தியஅரசு ஒரு கேடுகெட்ட அரசு. இன்னும் மக்கள் கிளர்ந்து எழ வேண்டும். மத்தியஅரசின் வஞ்ச திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எந்த எந்திரத்தையும் ஊருக்குள் விடக்கூடாது. அப்படி எந்திரங்கள் வந்தால் அடித்து நொறுக்க வேண்டும். இதற்கு இளைஞர்கள் தயாராக வேண்டும். மத்தியஅரசே நெருப்போடு விளையாடாதே என்று நான் எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story