மத்திகிரி அருகே காந்தி சிலை உடைப்பு; போலீசார் விசாரணை


மத்திகிரி அருகே காந்தி சிலை உடைப்பு; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 April 2018 11:00 PM GMT (Updated: 19 April 2018 8:45 PM GMT)

மத்திகிரி அருகே காந்தி சிலையை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் மத்திகிரி அருகே கலுகொண்டப்பள்ளி உள்ளது. இங்கு காந்தி சிலை ஒன்று உள்ளது. சாலையில் இருந்து 100 அடி தூரத்தில் உள்ள இந்த சிலை பீடத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் அந்த சிலை உள்ளது.

இந்த நிலையில் அந்த சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதில் காந்தி சிலையில் 2 கால்கள் இடது கை பகுதி சேதமடைந்தது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சிலை உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

வலைவீச்சு

அதன் பேரில் மத்திகிரி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதில், குடிபோதையில் மர்ம நபர்கள் சிலர் காந்தி சிலையை உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து, சிலையை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். 

Next Story