விவசாயிகள் வீண் செலவை தடுக்க நிலத்தின் மண்வளத்துக்கு ஏற்ப உரம்; நவீன கருவியில் புதிய வசதி


விவசாயிகள் வீண் செலவை தடுக்க நிலத்தின் மண்வளத்துக்கு ஏற்ப உரம்; நவீன கருவியில் புதிய வசதி
x
தினத்தந்தி 19 April 2018 11:33 PM GMT (Updated: 19 April 2018 11:33 PM GMT)

விவசாயிகள் வீண் செலவை தடுக்க நிலத்தின் மண்வளத்துக்கு ஏற்ப உரம் வாங்கும் வகையில் உரக்கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நவீன கருவியில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

நாடு முழுவதும் உர விற்பனை நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக உரக்கடைகளுக்கு, ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்ட நவீன கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில் விவசாயிகள் கைரேகையை பதிவு செய்ததும், அவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரிந்துவிடும். அதன்பின்னர் தேவையான உரத்தை விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம்.

இதன்மூலம் விற்பனை செய்யப்பட்ட உரத்துக்கு மட்டுமே, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அரசு மானியம் சென்றடையும். மேலும் விவசாயம் தவிர இதர பயன்பாட்டுக்கு வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மத்திய அரசு, உரத்துக்கு ஏற்கனவே சரக்கு-சேவை வரி விதித்துள்ளது. எனவே, விவசாயிகள் உரத்துக்கு வரி செலுத்துகின்றனர். ஆனால், எவ்வளவு வரி செலுத்தினோம் என்பது தெரியாமல் இருந்தது.

அதை விவசாயிகள் தெரிந்து கொள்ளவும், ஒவ்வொரு விவசாய நிலத்துக்கும் எவ்வளவு உரம் இடவேண்டும் என்பதை கணக்கிடவும் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டது. இந்த புதிய மென்பொருள் உரக்கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நவீன கருவியில் இணைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் உரம் வாங்கி ரசீதில் சரக்கு-சேவை வரி தனியாக குறிப்பிடப்படுவதால் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல் மண்வள விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு விவசாய நிலத்துக்கு எந்த உரத்தை எவ்வளவு இடவேண்டும் என்பதையும் நவீன கருவி மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனால் உரத்துக்கு விவசாயிகள் வீண் செலவு செய்வதை தவிர்க்கலாம். எனவே, புதிய மென்பொருள் உதவியுடன் நவீன கருவியை எவ்வாறு? பயன்படுத்து என்பது குறித்து தமிழகம் முழுவதும் உரக்கடை உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உரக்கடை உரிமையாளர்களுக்கான பயிற்சி நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் சுருளியப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வன், வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Next Story