காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் நிலைநிறுத்தும்


காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் நிலைநிறுத்தும்
x
தினத்தந்தி 3 May 2018 10:45 PM GMT (Updated: 3 May 2018 9:18 PM GMT)

காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் நிலைநிறுத்தும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் 53-வது பிறந்த நாள் விழா கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமுர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

தஞ்சையில் இருந்து விரைவில் ராமராஜ்ய ரத யாத்திரையை இந்து மக்கள் கட்சி சார்பில் தொடங்க உள்ளோம். இந்து மக்கள் கட்சியின் செயல்பாடு தமிழகம் அளவில் நல்ல முன்னேற்றத்தில் இருந்து வருகிறது. இதேபோல் தொடர்ந்து நிர்வாகிகள் செயல்பட்டால் தமிழகத்தில் திராவிட கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்கலாம்.

காவிரி நீரை பொறுத்தவரையில் பாரத நாட்டின் பொது சொத்து என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. எனவே காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு உரிய உரிமையை சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் நிலை நாட்டும் என்பதில் நம்பிக்கை உள்ளது.

காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காமல் போனதற்கு தி.மு.க. தான் காரணம். ஆனால் அந்த கட்சியின் செயல் தலைவர் தேவையில்லாத போராட்டங்களை காவிரி நீருக்காக செய்து கொள்வதாக காட்டி வருகிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் இதேபோல் அவர் செய்ய முடியுமா?

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தொடர்ந்து போராட்டங்களை தூண்டி விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story