வீட்டின் கழிவறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்


வீட்டின் கழிவறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 May 2018 9:11 AM GMT (Updated: 12 May 2018 9:11 AM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டின் கழிவறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வீட்டு உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்–இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் டி.குமாரமங்கலத்தில் உள்ள அண்ணாமலை (வயது 60) என்பவருடைய வீட்டில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.

வீட்டின் கழிவறையில் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது மதுபாட்டில்கள் இருந்தன.

இதையடுத்து கழிவறையில் இருந்த 30 அட்டை பெட்டிகளில் இருந்த 1,344 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், இந்த மதுபாட்டில்கள் அனைத்தும் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யக்கூடியவை என்றும், இதனை அண்ணாமலை, புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து வீட்டு கழிவறையில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ரூ.1½ லட்சம் மதிப்புள்ள அந்த மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றி உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த அண்ணாமலை தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story