ராணுவ வீரர், சகோதரர் வீடுகளில் 54½ பவுன் நகை– ரூ.60 ஆயிரம் கொள்ளை


ராணுவ வீரர், சகோதரர் வீடுகளில் 54½ பவுன் நகை– ரூ.60 ஆயிரம் கொள்ளை
x
தினத்தந்தி 12 May 2018 11:00 PM GMT (Updated: 12 May 2018 5:20 PM GMT)

மார்த்தாண்டம் அருகே ராணுவ வீரர் மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் கதவை உடைத்து 54½ பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு தெற்றவிளையை சேர்ந்தவர் ராஜப்பன். இவரது மகன்கள் அசோக் குமார் (வயது 35), அஜித்குமார்(32). இவர்கள் இருவரும் அந்த பகுதியில் அருகருகே வீடுகள் கட்டி உள்ளனர்.

அசோக் குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வீட்டில் இவரது மனைவி சுனிதாவும், குழந்தைகளும் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் சுனிதா வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் நட்டாலத்தில்  உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இரவு அங்கேயே தங்கி விட்டார்.

 அஜித்குமார் கொல்கத்தாவில் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை  அழைத்து கொண்டு கொல்கத்தாவுக்கு சென்றுவிட்டார். இதனால் இரண்டு வீடுகளும் ஆள் இல்லாமல் பூட்டி கிடந்தன.

இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் அசோக் குமார் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

பின்னர் பக்கத்தில் உள்ள ராணுவ வீரர் அஜித்குமாரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த 24½ பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துவிட்டு ஓடிவிட்டனர்.

இந்தநிலையில், நேற்று காலையில் ராஜப்பன் தனது மகன்களின் வீடுகளுக்கு சென்ற போது, முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுஉள்ளே சென்று பார்த்த போது, இரண்டு வீடுகளிலும் நகை, பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த சம்பவங்கள் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

ராணுவ வீரர் மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் 54½ பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு.  நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டைபூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றார். அப்போது, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே, அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story