சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராடும் சீமான் பேட்டி


சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராடும் சீமான் பேட்டி
x
தினத்தந்தி 12 May 2018 11:00 PM GMT (Updated: 12 May 2018 8:06 PM GMT)

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராடும் என்று சீமான் கூறினார்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார்.

இதையடுத்து ஓமலூரில், விமான நிலையம் விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் குப்பூர், தும்பிபாடி, சட்டூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். மேலும் நிலம் கையகப்படுத்தப்படுவதை அறிந்த அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி கந்தசாமியின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் தான் வந்து செல்கிறது. அதில் பயணிக்க ஆட்கள் இல்லை. எதற்காக விரிவாக்கம் செய்கிறார்கள். ஏற்கனவே இந்த விமான நிலையம் அமைத்தபோது 4 ஏக்கரை இழந்த விவசாயி கந்தசாமி மீதம் உள்ள நிலமும் பறிபோயிடும் என்ற அதிர்ச்சியில் உயிரிழந்து விட்டார். அவரது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற வந்துள்ளேன்.

570 ஏக்கர் பரப்பளவில் விமான நிலைய விரிவாக்கம் எதற்கு? 8 வழிச்சாலை எதற்கு போடுகிறார்கள். நாங்கள் கேட்பது காவிரி நீர். அதனை தராமல் விமான நிலையம் விரிவாக்கம், 8 வழிச்சாலை என தேவையில்லாத திட்டங்களை தொடங்குகிறார்கள். மேலை நாடுகளில் இதைவிட குறைவான பரப்பளவில் விமான நிலையம் உள்ளது. விவசாய நிலத்தை அழித்து, வளங்களை கொள்ளையடித்து இந்த அரசு திட்டங்களை செயல்படுத்த பார்க்கிறது. அதனை எதிர்த்து போராடதான் இங்கு வந்துள்ளோம். விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரிக்கு சீமான் சென்றார். அங்கு பரிசலில் ஏரியைச் சுற்றிப்பார்த்து விட்டு மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, சேலம்-சென்னை 8 வழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கம் இவை இரண்டும் பொதுமக்களின் நலனுக்காக இல்லை. இவை கார்ப்பரேட் கம்பெனிகளின் வசதிக்காக செயல்படுத்தப்பட உள்ளது. 4 டி.எம்.சி. தண்ணீருக்காக கர்நாடகத்தில் மண்டியிட்டு பிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்றார். பேட்டியின் போது சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் உடனிருந்தார். 

Next Story