மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 295 பேர் மரணம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தகவல்


மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 295 பேர் மரணம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 13 May 2018 9:45 PM GMT (Updated: 13 May 2018 6:46 PM GMT)

மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 295 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2017–ம் ஆண்டில் 928 விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதில் 295 பேர் மரணம் அடைந்துள்ளனர். மரணம் அடைந்தவர்களில் 169 பேர் இருசக்கர வாகன விபத்துகளில் பலியாகியுள்ளனர். இதேபோல் கனரக வாகனம், நான்கு சக்கர வாகன விபத்துகளில் 41 பேரும், மூன்று சக்கர வாகனம் மற்றும் சைக்கிள் விபத்துகளில் 26 பேரும் இறந்துள்ளனர். இதுதவிர நடந்து சென்றவர்கள் 59 பேர் வாகனம் மோதி மரணம் அடைந்துள்ளனர். மேலும் விபத்துகளில் 1,472 பேர் காயம் அடைந்துள்ளனர். எனவே வாகனத்தை ஓட்டும்போது வரையறுக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்வதால் மரணம் அடைவது குறையும்.

மாவட்டத்தில் கடந்த 2017–ம் ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரத்து 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக 9 ஆயிரத்து 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டு விபத்துகளை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலைவிதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களிடம் ஹெல்மெட் அணிவதால் விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் எனறு அன்புடன் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணிந்து செல்பவர்களுக்கு பரிசுகள் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சிவகங்கை அரண்மனை வாசலில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் வாகனங்களில் செல்பவர்களிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை விளக்கி கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது 3 சக்கர மோட்டார் வாகனம் ஓட்டிவந்த ஒருவர் ஹெல்மெட் அணிந்து வந்தார். இதனையடுத்து அவருக்கு போலீசார் பரிசு அளித்தனர்.


Next Story