விளைநிலங்களை கையகப்படுத்தி சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கூடாது சீமான் பேட்டி


விளைநிலங்களை கையகப்படுத்தி சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கூடாது சீமான் பேட்டி
x
தினத்தந்தி 13 May 2018 11:45 PM GMT (Updated: 13 May 2018 7:46 PM GMT)

விளைநிலங்களை கையகப்படுத்தி சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–

சேலம் விமான நிலையம் 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. தற்போது தான் செயல்படுகிறது. இதற்கு 160 ஏக்கர் நிலமே போதுமானது. பல நாடுகளில் பன்னாட்டு முனையங்களே இந்த அளவு நிலத்தில் தான் இயங்கி வருகின்றன.

சேலத்தில் பலர் விளை நிலங்களை விட்டுவிட்டு கஷ்டப்படுகின்றனர். அங்கு ஒரே ஒரு விமானம் தான் செல்கிறது. விளைநிலங்களை கையகப்படுத்தி 570 ஏக்கரில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே நிலம் தந்தவர்கள் மீண்டும் தங்கள் நிலங்களை எடுத்துவிடுவார்களோ? என்ற அச்சத்தில் உள்ளனர். ஒருவர் இறந்தே போய்விட்டார்.

மக்கள் விமான நிலையமா? கேட்டார்கள். காவிரியில் இருந்து தண்ணீர் தான் கேட்டனர். ஆனால் அதை தராமல் தஞ்சாவூரில் விமான நிலையம், சேலத்தில் 8 வழிப்பாதை கொண்டு வருகிறோம் என்று கூறுகின்றனர்.

எஸ்.வி.சேகரின் வீட்டின்முன்பு போராடியவர்கள் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. ஆனால் போராட்டத்திற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரம் அவரை பாதுகாக்கிறது.

கர்நாடகாவில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் கிடைக்கும் என்று முதல்–அமைச்சர் கூறுகிறார். எடியூரப்பா முதல்–மந்திரியாக இருந்தபோது தண்ணீர் வந்ததா?.

தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்தபோது அதிக வருமானம் உள்ள துறையாக கேட்டு பெற்றது. மாநிலத்தின் நலனுக்கான துறையை பெற்றிருந்தால் ஈழத்தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும்.

இவ்வாறு சீமான் கூறினார்.


Next Story