சிவமொக்கா பா.ஜனதா அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டம் 50 பேர் கைது


சிவமொக்கா பா.ஜனதா அலுவலகம் முன்பு காங்கிரசார் போராட்டம் 50 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2018 10:36 PM GMT (Updated: 17 May 2018 10:36 PM GMT)

முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவமொக்கா பா.ஜனதா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா,

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந்தேதி நடந்தது. இதையடுத்து கடந்த 15-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பா.ஜனதா 104 இடங்களை பிடித்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 38 இடங்களில் வெற்றி பெற்றன. யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அவசர, அவசரமாக ஜனதா தளம்(எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தது.

இதையடுத்து ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். அதேபோல, தாங்கள் தனிபெரும் கட்சியாக உள்ளதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு எடியூரப்பாவும் கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். இந்த நிலையில் கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று எடியூரப்பா கர்நாடகத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.

இந்த நிலையில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கவர்னரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல, சிவமொக்கா குவெம்பு சாலையில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகம் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பா.ஜனதாவினருக்கு எதிராகவும், கவர்னருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கவர்னர் ஜனநாயகத்தை படுகொலை செய்து பா.ஜனதாவை பதவி ஏற்க அனுமதி கொடுத்துள்ளார். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணிக்கு அதிக பெரும்பான்மை இருந்தும், குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைக்காதது கேலி கூத்தானது என்று கூறினார்கள்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ‘இங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. உடனே கலைந்து செல்லுங்கள்‘ என்று கூறினர். ஆனாலும், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல, பா.ஜனதாவினரையும், கவர்னர் வஜூபாய் வாலாவையும் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சிவமொக்கா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story