மோடி மீது உத்தவ் தாக்கரே தாக்கு


மோடி மீது உத்தவ் தாக்கரே தாக்கு
x
தினத்தந்தி 18 May 2018 11:36 PM GMT (Updated: 18 May 2018 11:36 PM GMT)

எதற்காக தேர்தலை நடத்தவேண்டும், முதல்-மந்திரியை நேரடியாக டெல்லியில் இருந்து தேர்ந்தெடுங்கள் என கர்நாடக முதல்-மந்திரி நியமன விவகாரத்தில் பா.ஜனதா உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கி பேசினார்.

மும்பை,

கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.

இதற்கிடையே கர்நாடகாவில் 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழும் பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதன்படி அவர் முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.

இதற்கு பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

ஜனநாயகத்தை தொடர்ச்சியாக படுகுழியில் தள்ளிவிட்டுவிட்டு, ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்வதில் என்ன பயன்?. பேசாமல் தேர்தல் நடத்துவதை நிறுத்திவிட்டால் பிரதமர் நரேந்திர மோடி எந்த பிரச்சினையும் இல்லாமல் உலக நாடுகளை சுற்றிவர வசதியாக இருக்கும்.

மேலும் தேர்தலால் ஏற்படும் தேவையற்ற செலவுகள் ஏற்படாது. அந்த பணம் சேமிக்கப்படும். கவர்னர் மூலமாக நாட்டின் முதல்-மந்திரியை நேரடியாக நீங்களே நியமித்துக்கொள்ளுங்கள்.

பா.ஜனதா கட்சி தேர்தலின் போது மட்டுமே அயோத்தி பிரச்சினையை கையில் எடுக்கிறது. கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தும் பா.ஜனதா அரசு ராமர் கோவில் கட்டுவதற்கு அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார். 

Next Story