காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை
x
தினத்தந்தி 19 May 2018 12:03 AM GMT (Updated: 19 May 2018 12:03 AM GMT)

ஒரு நாள் சுகத்திற்காக அரசியல் எதிர்காலத்தை பாழாக்கி கொள்ள வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக இருக்கும் பா.ஜனதா ஆட்சிக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்கும்படி எடியூரப்பா அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதன்படி இன்று(சனிக்கிழமை) கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் தங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சித்தராமையா மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் தனி விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து ஐதராபாத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடக சட்டசபை கூட்டத்தில் நாளை(இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் எடியூரப்பா அரசு தோல்வி அடையும். நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. உங்களுக்கு பா.ஜனதாவினர் பணம், பொருள், மந்திரி பதவியை வழங்குவதாக ஆசை வார்த்தைகளை கூறுகிறார்கள். இதை நம்பி ஒரு நாள் சுகத்திற்காக அரசியல் எதிர்காலத்தை பாழாக்கி கொள்ள வேண்டாம். சட்டசபையில் நாளை(இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரிப்பவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று சொல்வார்கள்.

அப்போது நீங்கள் இருக்கையில் அமைதியாக உட்கார்ந்து இருக்க வேண்டும். தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் எழுந்து நிற்குமாறு சபாநாயகர் சொல்வார். அப்போது நீங்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். இந்த நிகழ்வின்போது நீங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நாட்டில் மோடிக்கு எதிரான நிலை உள்ளது. வரும் காலத்தில் ராகுல் காந்தி ஆட்சி அதிகாரத்திற்கு வருவார். உங்களுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story