குமரி அருகே துறைமுகம் அமைக்க எதிர்ப்பு: மணக்குடி உள்பட 11 இடங்களில் மறியல்


குமரி அருகே துறைமுகம் அமைக்க எதிர்ப்பு: மணக்குடி உள்பட 11 இடங்களில் மறியல்
x
தினத்தந்தி 19 May 2018 11:00 PM GMT (Updated: 19 May 2018 9:29 PM GMT)

குமரி அருகே துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணக்குடி உள்பட 11 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மீனவ கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும் கீழமணக்குடிக்கும் இடையே பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சரக்கு பெட்டக மாற்று முனைய திட்ட எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அத்துடன், நாகர்கோவில் நகருக்கு வரும் வழியில் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போராட்டக்காரர்கள் யாரும் நகருக்குள் நுழையாதபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக தென்தாமரைகுளம், சுசீந்திரம், தெங்கம்புதூர், மேலகிருஷ்ணன்புதூர், சாமிதோப்பு, பெருமாள்புரம் போன்ற பகுதிகளில் சாலையில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் 7 மணியளவில் மணக்குடி மீனவ கிராமத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 250 பேர் 2 அரசு பஸ்களில் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டனர். தெங்கம்புதூர் பகுதியில் சென்ற போது, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அரசு பஸ்சில் சோதனையிட்டனர். அப்போது, பஸ்சில் பயணம் செய்தவர்கள் நாகர்கோவில் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பஸ்சில் இருந்த 250 பேரை போலீசார் கைது செய்து மதுசூதனபுரத்தில் இருந்த ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த தகவல் அறிந்ததும் மணக்குடி கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் மணக்குடி புதிய பாலத்தின் அருகே கூடினர். அவர்கள், துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் பாலத்திலும், சாலையிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து காலை 8.45 மணியளவில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கலைந்து செல்லுமாறு போலீசார் வற்புறுத்தினர். பின்னர் 10 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் நாகர்கோவிலில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவளத்தில் இருந்து நேற்று காலை 8 மணியளவில் 3 வேன்களில் ஆண்கள், பெண்கள் புறப்பட்டனர். கொட்டாரம் பகுதியில் சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் இருந்த பள்ளிக்கூடத்தில் தங்க வைத்தனர். இந்த தகவல் அறிந்ததும் கோவளம், கன்னியாகுமரி போன்ற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கன்னியாகுமரி சர்ச்ரோடு சந்திப்பில் கூடி போலீசாரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்த போராட்டத்தால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி விவேகானந்தபுரம் அருகே உள்ள சக்கரதீர்த்த காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனித நீர் எடுத்து யானை மீது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அந்த ஊர்வலம் கன்னியாகுமரி சர்ச்ரோடு சந்திப்பில் சென்ற போது அங்கு மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என நினைத்து, புனித நீர் ஊர்வலம் எடுத்து சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம், ‘மதவழிபாட்டுக்கு நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டோம். புனித நீர் ஊர்வலம் தாராளமாக செல்லலாம்’ எனக்கூறி சாலையில் இருந்து விலகி வழிவிட்டனர். இதையடுத்து புனித நீர் ஊர்வலம் அமைதியாக கடந்து சென்றது. ஊர்வலம் சென்றவுடன் மீண்டும் மறியல் போராட்டம் நடந்தது. இதுபோல் கீழமணக்குடி, புதுக்கிராமம், ஆரோக்கியபுரம், சங்குதுறை பீச், ராஜாக்கமங்கலம் உள்பட குமரி மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நடந்த மறியலில் மீனவ மக்கள் திரளாக பங்கேற்றனர். 

Next Story