திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க.-நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்


திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க.-நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்
x
தினத்தந்தி 19 May 2018 11:00 PM GMT (Updated: 19 May 2018 9:32 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க.-நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனை கண்டு பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருச்சி,

தமிழகத்தில் காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் மக்கள் பிரச்சினைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் தன்னை பற்றி விமர்சித்து நாம் தமிழர் கட்சியினர் சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாகவும், இதுபோன்ற அவதூறு பிரசாரத்தை அந்த கட்சியினர் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் சில நாட்களுக்கு முன்பு வைகோ எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு பதிலடியாக சமூக வலைத்தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் வைகோவை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதனால் அவ்வப்போது ம.தி.மு.க.-நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் அரியலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

அதேபோல் தஞ்சையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்து வந்ததால் இரு கட்சி தலைவர்களையும் வரவேற்பதற்காக அந்த கட்சிகளின் தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் விமானநிலையத்தில் திரண்டு இருந்தனர்.

முதலில் வைகோ விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து வைகோ பத்திரிக்கையாளர்களுக்கு விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர், வைகோவை பற்றி கிண்டலாக பேசினார். இதனை கேட்டு அருகே நின்ற ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் ஆவேசம் அடைந்தார். பின்னர் இது பற்றி அவரிடம் தட்டி கேட்டார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே வைகோ காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இருப்பினும் இரு தரப்பு தொண்டர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்து இருந்த கட்சி கொடி கம்புகளால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதனைக் கண்டு விமானத்தில் பயணம் செய்ய காத்து இருந்த பயணிகளும், அவர் களது உறவினர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் விமான நிலைய பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இந்த மோதலில் நாம் தமிழர் கட்சி தொண்டர் கரிகாலன் கால் முறிந்தது. மற்றொரு தொண்டருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், ஒரு தொண்டர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்த விமான நிலைய போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மோதலை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் காயம் அடைந்த 2 பேரையும், மயங்கி விழுந்தவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த மோதல் நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பே வைகோ விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்று விட்டார்.

தொடர்ந்து இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அமைதி ஏற்படுத்தினர். இதையடுத்து விமானநிலையத்தில் இருந்து சீமான் வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள், “விமான நிலையத்தில் நடந்த மோதல் சம்பவம் குறித்து கேட்டனர். அதற்கு அவர், தான் இது பற்றி கேள்விப்பட்டதாகவும், என்ன நடந்தது என்று விசாரித்தபிறகு கூறுகிறேன்“ என்று கூறிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து இரு தரப்பு தொண்டர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மோதல் சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story