இளம்பெண் தற்கொலை: விசாரணை நடத்தக்கோரி அரசு ஆஸ்பத்திரியை முற்றகையிட்ட உறவினர்கள்


இளம்பெண் தற்கொலை: விசாரணை நடத்தக்கோரி அரசு ஆஸ்பத்திரியை முற்றகையிட்ட உறவினர்கள்
x
தினத்தந்தி 20 May 2018 8:07 PM GMT (Updated: 20 May 2018 8:07 PM GMT)

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவருடைய உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

திருப்பூர்,

அரியலூர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த முத்தழகன் என்பவருடைய மகள் செம்பருத்தி (வயது 17). இவர் திருப்பூர் மண்ணரையில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கி அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்வத்தன்று காலையில் இவருடைய அறையில் இருந்த மற்ற பெண் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று விட்டனர். ஆனால் செம்பருத்தி மட்டும் வேலைக்கு செல்லாமல் அறையில் இருந்துள்ளார்.

தூக்கில் தொங்கினார்

அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு போகவில்லை. இதையடுத்து அவருடன் வேலை பார்த்த மற்ற தொழிலாளர்கள், செம்பருத்தியை தேடி அவருடைய அறைக்கு சென்றனர். அப்போது அந்த அறையில் செம்பருத்தி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீசார் விரைந்து சென்று செம்பருத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செம்பருத்தி தூக்கில் தொங்கிய அறையில் கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளாரா? என்றும் போலீசார் தேடிப்பார்த்தனர். அப்போது கடிதம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

முற்றுகை

மேலும் செம்பருத்தி தூக்கில் தொங்கியது குறித்து அவருடைய பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே செம்பருத்தியின் பெற்றோரும், உறவினர்களும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் செம்பருத்தி சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், அவருடைய குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையில் வயிற்று வலியால் செம்பருத்தி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story