கச்சிராயப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6½ லட்சம் நகை–பணம் கொள்ளை


கச்சிராயப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6½ லட்சம் நகை–பணம் கொள்ளை
x
தினத்தந்தி 20 May 2018 8:35 PM GMT (Updated: 20 May 2018 8:35 PM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6½ லட்சம் நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயபாளையம் அருகே உள்ள மாத்தூர் கிராமம் இந்திராநகரை சேர்ந்தவர் கொளஞ்சி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் அவரது மனைவி சந்திரா(வயது 48) மற்றும் பிள்ளைகள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரா நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டி விட்டு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு அங்கேயே தங்கி விட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

நகை–பணம் திருட்டு

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த ரூ.31 ஆயிரம் பணம் மற்றும் 26 பவுன் நகைகளை காணவில்லை. சந்திரா அவரது உறவினர் வீட்டுக்கு சென்றதை அறிந்துகொண்டு இரவில் யாரோ மர்ம மனிதன் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்றுவிட்டான். இதன் மதிப்பு ரூ.6½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சந்திராக புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்டன் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story