மன்னார்குடி அருகே வங்கியில் கொள்ளை: மேலும் ஒருவர் கைது


மன்னார்குடி அருகே வங்கியில் கொள்ளை: மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 20 May 2018 10:15 PM GMT (Updated: 20 May 2018 9:46 PM GMT)

மன்னார்குடி அருகே வங்கியில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அசேஷம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி பணியில் இருந்த வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.5 லட்சத்து 58 ஆயிரம் மற்றும் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் தனிப்படையினர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மணப்பாறை கிளை ஊழியர் மரியசெல்வத்திற்கு தொடர்பு இருப்பதை அறிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து மரியசெல்வம் கொடுத்த தகவலின்பேரில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமார், மீரான்மைதீன், சுடலைமணி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 58 ஆயிரம், 2 துப்பாக்கிகள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கொள்ளையில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த ராஜா, மதுரையை சேர்ந்த அயூப்கான் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 7½ பவுன் நகைகள் மற்றும் 5 துப்பாக்கி தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

ஒருவர் கைது

இந்தநிலையில் அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கியை வாங்கி கொடுத்ததாக மதுரை ராகுல் காந்தி தெருவை சேர்ந்த மணி என்கிற கூல்மணியை (வயது22) தனிப்படை போலீசார் கைது செய்து மன்னார்குடி கோர்ட்டில் நீதிபதி விஜயன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கூல்மணியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.


Next Story