காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்காது தொல். திருமாவளவன் பேட்டி


காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்காது தொல். திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 20 May 2018 11:00 PM GMT (Updated: 20 May 2018 9:51 PM GMT)

காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்காது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் உள்ள வயலப்பாடி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்து பேசினார். பின்னர் அருகில் உள்ள நூலகம் ஒன்றையும் திறந்து வைத்தார்.இதையடுத்து திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகாவில் மதச்சார்பற்ற சக்திகள் தேர்தலுக்கு முன்னரே கூட்டணி அமைத்திருக்க வேண்டும். கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி தவறியதால் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறிவிட்டன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கணிசமான இடங்களில் மட்டும் வெற்றி பெற்றதால் தொங்கு சட்டசபை உருவாகிவிட்டது. பாரதீய ஜனதா கட்சி ஜனநாயக படுகொலையை செய்துள்ளது.

தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்காது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் நடுவர் நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பு ஆகும். ஆனால் உச்சநீதிமன்றம் இதை பொருட்படுத்தவில்லை. மாறாக வாரியத்திற்கு பதிலாக ஆணையத்தை அமைக்க தீர்ப்பளித்துள்ளது. ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்காது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியதாகவே அமையும்.

கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று தான் கூறப்பட்டிருந்தது. அதற்கு கர்நாடக அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஒப்புதல் தான் அளித்தது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மத்திய அரசு சில நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? என்று விளங்கவில்லை. இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை பொது பட்டியலில் இருந்து நீக்கி மாநில பட்டியலில் இணைக்க வேண்டும்.

காவிரி பிரச்சினை

தி.மு.க., தோழமை கட்சிகளுடன் நடத்தும் கூட்டம் 22-ந்தேதி(நாளை) சென்னையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினை குறித்தும், காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்தும் விவாதிக்க உள்ளோம். காவிரி பிரச்சினைக்காக கமல்ஹாசன் கூட்டிய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்காக கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வயலை செந்தில்வளவன், முத்து, வளர்மதி, மருதமுத்து, மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள் நந்தன், கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story