‘எங்கள் குடும்ப வருமானத்துக்கு ஆதாரமான ஒரே மகனை இழந்து விட்டேன்’ போலீஸ் தடியடியில் பலியானவரின் தாய் கதறல்


‘எங்கள் குடும்ப வருமானத்துக்கு ஆதாரமான ஒரே மகனை இழந்து விட்டேன்’ போலீஸ் தடியடியில் பலியானவரின் தாய் கதறல்
x
தினத்தந்தி 24 May 2018 9:30 PM GMT (Updated: 24 May 2018 7:31 PM GMT)

‘எங்கள் குடும்ப வருமானத்துக்கு ஆதாரமான ஒரே மகனை இழந்து விட்டேன்’ என்று போலீஸ் தடியடியில் பலியானவரின் தாய் கதறி அழுதார்.

சாயர்புரம், 

‘எங்கள் குடும்ப வருமானத்துக்கு ஆதாரமான ஒரே மகனை இழந்து விட்டேன்’ என்று போலீஸ் தடியடியில் பலியானவரின் தாய் கதறி அழுதார்.

காயம் அடைந்தவர் சாவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கடந்த 22–ந் தேதி போலீஸ் தடியடியில் சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சேர்ந்த செல்வசேகர் (வயது 40) என்பவர் காயம் அடைந்தார்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வசேகர் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய தந்தை பலவேசம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு தாய் மாசாணம் மற்றும் 2 அக்காள்கள் உள்ளனர்.

இதில் ஒருவருக்கு திருமணம் ஆகி விட்டது. மற்றொருவருக்கு திருமணம் ஆகவில்லை.

யாரிடமும் சரியாக பேசமாட்டான்

செல்வசேகர் பலியானது குறித்து அவருடைய தாய் மாசாணம் கதறி அழுதவாறு கூறியதாவது:–

என்னுடைய மகன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். யாரிடமும் சரியாக பேச மாட்டான். அவன் உண்டு, வேலை உண்டு என்று இருப்பான். என்னுடைய கணவர் இறந்த பிறகு, அவனது வருமானத்தில்தான் எங்களது குடும்பம் நடந்து வந்தது. கடந்த 22–ந் தேதி வேலைக்கு சென்றான். ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டுள்ளது.

போலீஸ் தாக்குதல்

எனவே, இன்று விடுமுறை வீட்டுக்கு செல்லுங்கள் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதையடுத்து என்னுடைய மகன் ஊருக்கு வருவதற்காக 3–வது மைல் பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளான். அங்கு வந்த போலீசார் என்னுடைய மகனை சரமாரியாக லத்தியால் தாக்கி வயிற்றிலும், மார்பிலும் மிதித்துள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவன், ஆஸ்பத்திரியில் இன்று (அதாவது நேற்று) காலை பரிதாபமாக இறந்து விட்டான். அப்பாவியான என்னுடைய ஒரே மகனை இழந்து விட்டேன். இனி பிழைப்புக்கு நாங்கள் என்ன செய்ய போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.10 லட்சம் உயிரை திருப்பி தருமா?

செல்வசேகரின் அக்காள்கள் கூறுகையில், அரசு, வீட்டில் ஒருவருக்கு வேலையும், ரூ.10 லட்சமும் தருவதாக கூறியுள்ளது. அந்த 10 லட்சம் ரூபாய் எங்களுடைய தம்பி உயிரை தருமா? என்று கேட்டபடி கதறி அழுதனர்.

இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.


Next Story