பெருஞ்சாணி அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


பெருஞ்சாணி அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2018 11:00 PM GMT (Updated: 12 Jun 2018 9:29 PM GMT)

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை தாண்டியதால் அணையின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. விட்டு, விட்டு மிதமான மழையாக பெய்து வந்த இந்த மழை, கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்ந்து 2 நாட்கள் சூறாவளி காற்றுடன் கனமழையாக பெய்தது. அதன்பிறகும் சாரல் மழையாக விட்டு, விட்டு பெய்து வருகிறது.

ஏற்கனவே முக்கால் அளவு நீர்மட்டத்தை எட்டியிருந்த அணைகளின் நீர்மட்டம் இந்த மழையால் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பெருஞ்சாணி- 1, சிற்றார் 1- 3, சிற்றார் 2- 14.2, மாம்பழத்துறையாறு- 3, புத்தன் அணை- 2.2, பொய்கை-1, பூதப்பாண்டி- 3.6, களியல்- 2.2, கன்னிமார்- 2.2, கொட்டாரம்- 5.8, கோழிப்போர்விளை- 2, குருந்தங்கோடு- 2.4 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.

இந்த மழையினால் அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து இருந்து வருகிறது. ஆறுகள், கால்வாய்களில் மழைத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,838 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 812 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,838 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 79 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 127 கன அடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 8 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 6 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையைத்தவிர பிற அணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 அடி வரை நீர்மட்டம் உயர்ந்திருந்த பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் 2 அடி உயர்ந்து 71.50 அடியாக இருந்தது.

இதேபோல் ஒரே நாளில் 3¼ அடி நீர்மட்டம் உயர்ந்து பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 11.70 அடியாக இருந்தது. நேற்று மேலும் 1.30 அடி உயர்ந்து 13 அடியாக இருந்தது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை தொட்டதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது வழக்கம். அதன்படி 71 அடியை தாண்டிய பெருஞ்சாணி அணையின் கரையோர பகுதி மக்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின்பேரில் நேற்று காலை வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இதன்மூலம் பெருஞ்சாணி அணை தண்ணீர் பாய்ந்தோடும் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

ஏற்கனவே கடந்த ஒரு வாரத்துக்கு முன் சிற்றார்-1, சிற்றார்-2 அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக குமரி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகரிடம் கேட்டபோது கூறியதாவது:-

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் பேச்சிப்பாறை அணையில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளும், பலப்படுத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை தாண்டியதால் கரையோர பகுதி மக்களுக்கு இன்று (அதாவது நேற்று) காலை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடைமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல்சாகுபடி செய்ய தொழிகலக்க கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை தண்ணீர் தோவாளை கால்வாய், அனந்தனார் கால்வாய், பட்டணங்கால் கால்வாய், நாஞ்சில் புத்தனார் கால்வாய் ஆகியவற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயில் இன்று (நேற்று) மாலை அல்லது நாளை (இன்று) காலையில் தண்ணீர் திறந்துவிடப்படும்.

குமரி மாவட்டத்தில் குளங்கள் உடையும் தருவாயில் எந்தக்குளமும் இல்லை. முழுமையாக 6 குளங்கள் நிரம்பியுள்ளன. 68 குளங்கள் 75 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரையிலான தண்ணீர் உள்ள குளங்களாகவும், 349 குளங்கள் 50 முதல் 75 சதவீதம் வரை தண்ணீர் உள்ள குளங்களாகவும், 982 குளங்கள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் உள்ள குளங்களாகவும், 635 குளங்கள் 25 சதவீதத்துக்கு குறைவாக தண்ணீர் உள்ள குளங்களாகவும் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story