தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்று அதிக அளவு மீன்களுடன் கரை திரும்பிய மீனவர்கள் மகிழ்ச்சி


தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்று அதிக அளவு மீன்களுடன் கரை திரும்பிய மீனவர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 Jun 2018 3:30 AM IST (Updated: 19 Jun 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

தடை காலம் முடிந்து தென் கடல் பகுதியில் மீன் பிடித்து கரை திரும்பிய பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு அதிகமான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 16–ந்தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கரை திரும்பினர். இதேபோல தடை காலம் முடிந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியான தென் கடல் பகுதியில் மீன் பிடிக்க பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் 100–க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றிருந்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை பல வகை மீன்களுடன் கரை திரும்பினர். இதில் ஒவ்வொரு படகிலும் மாவுலா, விளை, கிளி, பாறை, கணவாய், நண்டு உள்ளிட்ட பல வகை மீன்கள் அதிக அளவில் சிக்கியிருந்தன.

இதனால் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வெறிச்சோடி காணப்பட்ட தெற்கு வாடி கடற்கரை நேற்று மீனவர்கள் மீன் பிடித்து கரை திரும்பியதை தொடர்ந்து விறுவிறுப்பாக காணப்பட்டது. மீனவர்கள் படகில் இருந்து அனைத்து மீன்களையும் பிளாஸ்டிக் கூடைகளில் எடுத்து கடற்கரையில் இறக்கி வைத்தனர். தொடர்ந்து வியாபாரிகள் மூலம் அனைத்து மீன்களும் எடை போடப்பட்டு கம்பெனிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

அதில் ஒரு சில படகில் பெரிய கணவாய் மீன்களும் அதிக அளவில் சிக்கியிருந்தன. தடைகாலம் முடிந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு முதல் நாளாக மீன் பிடித்து கரை திரும்பிய ஒவ்வொரு படகிலும் சுமார் 1 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தடைகாலத்தையொட்டி கடந்த 2 மாதமாக மீன்களின் விலை, விலையேற்றத்துடன் காணப்பட்டது. தற்போது விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தொடங்கி விட்டதால், இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து வகையான மீன்களின் விலையும் ஓரளவு குறையத் தொடங்கும் என்றும் கூறப்படுகின்றது.


Next Story