திருமணமான 24–வது நாளில் பயங்கரம் காதல் மனைவி தலை துண்டித்து கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு ஜெயில் வார்டன் வெறிச்செயல்


திருமணமான 24–வது நாளில் பயங்கரம் காதல் மனைவி தலை துண்டித்து கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு ஜெயில் வார்டன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 24 Jun 2018 10:00 PM GMT (Updated: 24 Jun 2018 7:41 PM GMT)

திருமணமான 24–வது நாளில் நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை தலை துண்டித்து கொலை செய்த ஜெயில் வார்டன் கைது செய்யப்பட்டார்.

நெல்லை, 

திருமணமான 24–வது நாளில் நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை தலை துண்டித்து கொலை செய்த ஜெயில் வார்டன் கைது செய்யப்பட்டார்.

காதல் திருமணம்

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள தென்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது 27). இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வார்டனாக உள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் வேலம்மாள் (21) என்பவரும் காதலித்து கடந்த மாதம் 31–ந் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

வேலம்மாள் பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். திருமணம் முடிந்து சில நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். பின்னர் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் பாலகுரு பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டது.

தலை துண்டித்து கொலை

சிறிது நேரத்தில் மனைவியுடன் சமாதானமான பாலகுரு, திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவருவோம் என்று கூறினார். இதனை நம்பிய வேலம்மாளும் கணவருடன் கோவிலுக்கு செல்ல புறப்பட்டார். இரவு 10 மணி அளவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூருக்கு புறப்பட்டனர். பாளையங்கோட்டை நாற்கர சாலையில் பொட்டல் பகுதியில் வந்தபோது பாலகுரு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

வேலம்மாள் என்ன என்று கேட்டதற்கு பாலகுரு, பெட்ரோல் காலியாகி இருக்கும் என நினைக்கிறேன் என்று கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பையில் இருந்து அரிவாளை எடுத்தார். இதனால் பதறிப்போன வேலம்மாள் அங்கிருந்து தப்பி ஓடினார்.

ஆனால் பாலகுரு வேலம்மாளை துரத்திச்சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் வேலம்மாள் கீழே சாய்ந்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காத பாலகுரு, வேலம்மாளின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார். வேலம்மாள் தலையை தூக்கிவீசினார்.

போலீசில் சரண்

பின்னர் அரிவாளுடன் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு நள்ளிரவில் சென்று சரண் அடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டு திருமணமான 24–வது நாளில் மனைவியை தலையை துண்டித்து கொலை செய்தது தெரியவந்தது. கொலை நடந்த இடத்துக்கு பாலகுருவை போலீசார் அழைத்துச் சென்றனர். இரவு நேரம் என்பதால் கொலை செய்யப்பட்ட இடத்தை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் போலீசார் திரும்பி வந்தனர்.

நேற்று காலையில் மீண்டும் பாலகுருவை அழைத்துச்சென்று வேலம்மாள் உடலையும், புதருக்குள் கிடந்த தலையையும் மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுருவை கைது செய்தனர்.

காதலுக்கு எதிர்ப்பு

பாலகுரு போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

நான் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றபோது தான் நர்சிங் படித்து வந்த வேலம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலிக்க தொடங்கினோம். காதலுக்கு என்னுடைய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கொஞ்ச நாட்கள் கழித்து திருமணம் செய்துகொள்வோம் என்றபோது அவள், உடனே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள்.

கடந்த மாதம் 31–ந் தேதி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எங்கள் திருமணம் நடந்தது. எனது தரப்பில் யாரும் திருமணத்துக்கு வரவில்லை. திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக தனிக்குடித்தனம் நடத்தி வந்தேன். வேலம்மாளும் தொடர்ந்து நர்சிங் படித்துவந்தாள்.

செல்போனில் அடிக்கடி பேச்சு

10 நாட்களுக்கு முன்புதான் எனக்கு பாளையங்கோட்டை ஜெயிலுக்கு பணிமாறுதல் கிடைத்தது. நான் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம், வேலம்மாள் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பாள். நானும் யார் என்று கேட்டால் தோழி என்று கூறுவாள். அவள் என்கூட பேசிய நேரத்தைவிட, செல்போனில் பேசிக்கொண்டு இருந்த நேரம்தான் அதிகம்.

இதுபற்றி கேட்டால் என்னுடன் தகராறு செய்வாள். இதனால் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. நாளடைவில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் அவள் செல்போனில் பேசுவதை குறைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் கோவிலுக்கு போகலாம் என்று அழைத்துச்சென்று கொலை செய்தேன்.

இவ்வாறு பாலகுரு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


Next Story