நோய் கொடுமையால் குடும்பத்துடன் விஷம் குடித்தனர் கணவர் சாவு; மனைவி-மகள் உயிர் ஊசல்


நோய் கொடுமையால் குடும்பத்துடன் விஷம் குடித்தனர் கணவர் சாவு; மனைவி-மகள் உயிர் ஊசல்
x
தினத்தந்தி 30 Jun 2018 11:00 PM GMT (Updated: 30 Jun 2018 9:19 PM GMT)

நோய் கொடுமையால் குடும்பத்துடன் விஷம் குடித்த கணவர் இறந்தார். அவரது மனைவியும், மகளும் உயிருக்கு போராடி வருகின்றனர்.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 55), டிரைவரான இவர் மனைவி கலைவாணி (47), மகள் காயத்திரி (18) ஆகியோருடன் நெ.1டோல்கேட் மாருதி நகர் விஸ்தரிப்பில் உள்ள எஸ்.ஆர். பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 7 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

இதய நோயால் அவதிப்பட்டு வந்த பிரபாகரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆன்ஜியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கலைவாணி எலும்பு மஜ்ஜை நோயால் பாதிக்கப்பட்டு அவரும் அவதியடைந்து வந்தார். இந்த தம்பதியரின் மகள் காயத்திரி பிளஸ்-2 முடித்துவிட்டு பட்டப்படிப்பில் சேர்வதற்காக ஒரு தனியார் கல்லூரியில் நுழைவு தேர்வு எழுதியிருந்தார்.

இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் உடலில் ஏற்பட்ட நோயால் அவதியடைந்து வந்தனர். நோய் காரணமாக பிரபாகரன் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் குடும்ப வருமானம் குறைந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று மாலை கடைக்கு சென்று பூச்சி மருந்து வாங்கி வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் அவர், மனைவி மற்றும் மகளிடம், ‘இவ்வளவு சோதனைகளையும் தாங்கி கொண்டு இனி இந்த உலகத்தில் நாம் வாழ வேண்டாம்’ என கூறி, 3 பேரும் சேர்ந்து பூச்சி மருந்தை குடித்தனர். பிரபாகரன் தனது கண்முன் வாயில் நுரைதள்ளியவாறு உயிருக்கு போராடியதை கண்ட கலைவாணி மனசு மாறி உயிர்பிழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், உறையூரில் வசித்து வரும், அவரது தம்பி கனகராஜிற்கு (44) போன் செய்து, நாங்கள் 3 பேரும் விஷம் குடித்து விட்டோம் என்று தகவல் தெரிவித்தார்.

இதனையறிந்த அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது நடந்த சம்பவம் குறித்து அக்காள் கலைவாணியிடம் கேட்டார். அவர் நடந்த சம்பவத்தை கூறியவாறே மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு கலைவாணி, காயத்திரி ஆகிய 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரபாகரனை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து சென்று பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பிணக்கூறு ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story