மேலகிருஷ்ணன்புதூரில் அம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை


மேலகிருஷ்ணன்புதூரில் அம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 9:31 PM GMT)

மேலகிருஷ்ணன்புதூரில் அம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

மேலகிருஷ்ணன்புதூரில் பள்ளம் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறும். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கருவறையின் முன் பகுதியிலும், கொடி மரத்தின் அருகிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு, பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் கோவிலை திறக்க சென்ற போது, பூஜை பொருட்கள் வைக்கப்படும் அறையின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டிருந்தன.

கோவிலில் இருந்த இரண்டு உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இரவு மர்ம ஆசாமிகள் கோவில் வளாகத்துக்குள் புகுந்து கோவில் அறை கதவை உடைத்து நகை, பணம் ஏதாவது உள்ளதா? என தேடியுள்ளனர். அங்கு நகை எதுவும் இல்லாததால் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்துவிட்டு, பூஜை பொருட்களை சூறையாடிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை இதுவரை கைது செய்யாத நிலையில் தற்போது மீண்டும் கொள்ளை நடந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story