கருங்கல் அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


கருங்கல் அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x
தினத்தந்தி 10 July 2018 10:45 PM GMT (Updated: 10 July 2018 4:08 PM GMT)

கருங்கல் அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 500 லிட்டர் மண்எண்ணெய்யை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கருங்கல்,

குமரி மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வினியோகம் செய்யப்படும் மண்எண்ணெய் ஆகியவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும், மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெயும் கேரளாவுக்கு கடத்தி செல்லப்படுகிறது.

இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்துறை அதிகாரிகள் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் சொகுசு கார், அரசு பஸ் என தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருங்கல் அருகே எட்டணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்.

உடனே, அதிகாரிகள் ஜீப்பில் காரை துரத்தி சென்றனர்.  மூசாரி பகுதியில் சென்ற போது காரை மடக்கி பிடித்தனர். உடனே, டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடினார்.

தொடர்ந்து காரை சோதனையிட்ட போது, அதில் பிளாஸ்டிக் கேன்களில் 500 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது. இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் காரையும், மண்எண்ணெய்யையும் பறிமுதல் செய்தனர். மண்எண்ணெய்யை இனயம் அரசு குடோனிலும், வாகனத்தை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும், தப்பி சென்ற டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story