சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: பெண்ணிடம் விசாரணை


சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: பெண்ணிடம் விசாரணை
x
தினத்தந்தி 10 July 2018 9:45 PM GMT (Updated: 10 July 2018 8:30 PM GMT)

சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் மணிமேகலவதி. இவர் சென்னை கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக்கொடுத்தார்.

அந்தப்புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் எனக்கு நன்கு தெரிந்தவர் ஆவார். அவர் சிங்கப்பூரில் தனக்கு தெரிந்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் என்றும், அங்கு கைநிறைய சம்பளத்துடன் என்னால் நிறைய பேருக்கு வேலை வாங்கிக்கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதை உண்மை என்று நம்பிய நான் எனக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் 10 பேரிடம் தலா ரூ.1 லட்சம் வீதம், ரூ.10 லட்சத்தை வசூல் செய்து சிங்கப்பூர் வேலைக்காக சண்முகப்பிரியாவிடம் கொடுத்தேன். ரூ.10 லட்சத்தை பெற்றுக்கொண்டு சண்முகப்பிரியா ஏமாற்றிவிட்டார். சிங்கப்பூரில் யாருக்கும் வேலை வாங்கிக்கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து தான், என்னிடம் அவர் பணத்தை வாங்கினார். அவர் தற்போது அந்த ஓட்டலில் தான் தங்கியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப்புகார் மனு அடிப்படையில் கோடம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த சண்முகப்பிரியாவை போலீசார் நேற்று முன்தினம் இரவு மடக்கிப்பிடித்தனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும், விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story