கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அதிவேக விசைப்படகுகளை தடை செய்ய வலியுறுத்தல்


கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அதிவேக விசைப்படகுகளை தடை செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 July 2018 11:00 PM GMT (Updated: 11 July 2018 7:00 PM GMT)

அதிவேக சீன என்ஜின்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை தடை செய்ய வலியுறுத்தி கொள்ளிடம் அருகே மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சின்னகொட்டாயமேடு மீனவ கிராமம் உள்ளது. இங்கு 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 85 நாட்டு படகுகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் உள்ள சிறு, குறு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்று மீன் இல்லாமல் ஏமாற்றதுடன் திரும்பி வருகின்றனர்.

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக சீன என்ஜின்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் மூலம் சுருக்கு மடிவலைகளை பயன்படுத்தி மடவாமேடு, ஓலகொட்டாயமேடு, சின்ன கொட்டாயமேடு ஆகிய கடலோர பகுதியில் இருந்து 25 மீட்டர் தூரத்தில் உள்ள மீன்கள் மற்றும் மீன்குஞ்சுகளை பிடித்து வருவதே இதற்கு காரணம் என்று சின்னகொட்டாயமேடு பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால், இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்று சின்னகொட்டாயமேடு கிராம தலைவர் பழனி தலைமையில் மீனவர்கள் மற்றும் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் மீனவ கிராம பிரதிநிதிகள் ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட சீன என்ஜின் பொருத்திய அதிவேக விசைப்படகுகளை தடை செய்ய வலியுறுத்தி சின்னகொட்டாயமேடு கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சின்னகொட்டாயமேடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கவும் செல்லவில்லை.

இதுகுறித்து கிராம முன்னாள் தலைவர் குட்டியாண்டி கூறுகையில், பழையார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சில மீனவர்கள் ரூ.1 கோடி மதிப்பிலான அதிவேகம் கொண்ட சீன என்ஜின் பொருத்தப்பட்ட விசை படகுகளை பயன்படுத்தி கடலில் கரையோரம் இருக்கும் மீன்களை மீன்பிடித்து வருகின்றனர். இதனால் சிறு-குறு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அதிவேக விசைப்படகுகளால் மீனவர்களின் நண்பனாக விளங்கும் கடல்வாழ் உயிரினமான ஆலிவ் ரெட்லி ஆமைகள், டால்பின் ஆகியவை உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து சின்னகொட்டாயமேடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். 

Next Story