வேலை நிறுத்த போராட்டத்தால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் லாரிகள் ஓடவில்லை


வேலை நிறுத்த போராட்டத்தால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் லாரிகள் ஓடவில்லை
x
தினத்தந்தி 20 July 2018 10:30 PM GMT (Updated: 20 July 2018 5:33 PM GMT)

வேலை நிறுத்த போராட்டத்தால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் லாரிகள் ஓடாமல் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

பெரம்பலூர்,

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிப்பது. ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்துவது. மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்கு வரத்து காங்கிரஸ் சார்பில் நேற்று நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கின.

இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்ததால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று லாரிகள் ஓடவில்லை. ஒரு சில லாரிகளே இயங்கின. பெரம்பலூர் நகரில் ஆங்காங்கே சாலையோரங்களில், தேசிய நெடுஞ்சாலை யோரங்களில், பெட்ரோல் பங்க்கில், லாரி ஷெட் ஆகிய இடங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வேலை நிறுத்த போராட்டம் குறித்த கோரிக்கைகள் அடங்கிய நோட்டீசுகள் லாரிகளில் ஒட்டப்பட்டிருந்தன.

லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறும்போது, ‘லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் 515 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.50 லட்சம் வர்த்தகம் பாதிப்பு அடையும். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கட்டுமான பொருட்கள், காய்கறிகள், மோட்டார் உதிரிபாகங்கள் தேக்கம் அடைந்துள்ளன’ என்று கூறினார். இதே போல் பெரம்பலூர் மினி லாரி உரிமையாளர் சங்கத்தினரும் லாரிகளை இயக்காமல் லாரி ஸ்டாண்டில் நிறுத்தி வைத் திருந்தனர்.

அரியலூர் மாவட்டத்திலும் நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள 9 சிமெண்டு தொழிற்சாலையில் இயக்கப்படும் லாரிகளும் ஓடவில்லை. ஆங்காங்கே சாலையோரங்களிலும், சிமெண்டு தொழிற்சாலைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனால் அரியலூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் சிமெண்டு மூட்டைகள் தேக்கம் அடைய தொடங்கின. இதே போல் அரியலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் 500 லாரிகளும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதால், வெளி மாநிலங்களுக்கு காய்கறி, கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல், அவைகள் தேக்கம் அடைய தொடங்கின. இதனால் நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அளவில் வர்த்தக பாதிப்பு ஏற்படும் என அரியலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கோபி தெரிவித்தார்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு தொழிற்சாலை எதிரே ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட் டிருந்தன.

Next Story