பெரம்பலூர் குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான கபடி போட்டி


பெரம்பலூர் குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான கபடி போட்டி
x
தினத்தந்தி 2 Aug 2018 10:45 PM GMT (Updated: 2 Aug 2018 7:50 PM GMT)

பெரம்பலூர் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டியில் அரும்பாவூர் அரசு பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

பெரம்பலூர்,


பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பாக பெரம்பலூர் மற்றும் குன்னம் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ–மாணவிகளுக்கான தனித்தனியே 16 வகையான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. குன்னம் குறுவட்ட அளவிலான போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களை சார்ந்த அனைத்து வகை பள்ளிகளில், இருந்து 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவ–மாணவிகளுக்கான கால்பந்து போட்டி தனித்தனியே நடத்தப்பட்டது. இதில் 50–க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் வரிசைபட்டி சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணியும், 17 வயதிற்குட்பட்ட போட்டியில் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும், 19 வயதிற்குட்பட்ட போட்டியில் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் முதலிடத்தை பிடித்தன.

இதே போல் 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் வரிசைபட்டி சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணியும், 17 வயதிற்குட்பட்ட போட்டியில் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி அணியும், 19 வயதிற்குட்பட்ட போட்டியில் குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் முதலிடத்தை பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் சான்றிதழ்களை வழங்கினார். வருகிற 7–ந்தேதி பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் கூடைப்பந்து, டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது.


பெரம்பலூர் குறுவட்ட அளவிலான பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களை சார்ந்த அனைத்து வகை பள்ளிகளை சேர்ந்த 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு தனித்தனியே கபடி போட்டிகள் ஆலம்பாடி அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் 20–க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் அணிகள் கலந்து கொண்டனர். இதில் 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கபடி போட்டிகளில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள் அணிகள் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது. அந்த அணிகளுக்கு ஆலம்பாடி அரசினர் ஆதி திராவிட நல மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணன் சான்றிதழ்களை வழங்கினார். வருகிற 7–ந்தேதி பெரம்பலூர் குறுவட்ட அளவிலான பூப்பந்து போட்டிகள் மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், டென்னிஸ் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

Next Story