கறம்பக்குடி அருகே மூதாட்டி அரிவாளால் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை


கறம்பக்குடி அருகே மூதாட்டி அரிவாளால் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Aug 2018 6:17 AM GMT (Updated: 4 Aug 2018 6:17 AM GMT)

கறம்பக்குடி அருகே மூதாட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி கோவில் தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. இவருடைய மனைவி செல்லம்மாள்(வயது 70). மருதமுத்துவும், அவருடைய மகன் பரிமளமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் செல்லம்மாள் தனது மருமகள் வாசுகி மற்றும் ஒரு பேரன், 3 பேத்திகளுடன் வசித்து வந்தார். இதில் மூத்தபேத்தி காயத்திரி(21), திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, அதே நிறுவனத்தில் வேலை பார்த்த தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த அஜய் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

இதையடுத்து காயத்திரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலன் அஜய்யை திருமணஞ்சேரியில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து அங்கேயே தங்கி அஜய் கூலி வேலை பார்த்து வருகிறார். காயத்திரிக்கும், அஜய்க்கும் அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்து உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செல்லம்மாளின் குடும்பத்தினர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இதில் செல்லம்மாள் வீட்டின் வாசல் முகப்பு பகுதியில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை திடீரென செல்லம்மாளின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். அப்போது செல்லம்மாளை அரிவாளால் மர்மநபர்கள் சிலர் வெட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் சத்தம் போட்டதால், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அரிவாளால் வெட்டப்பட்டதில் உடல் முழுவதும் காயம் அடைந்த செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.

இது குறித்து அவருடைய குடும்பத்தினர் உடனடியாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அய்யனார், கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்லம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்லம்மாள் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? காயத்ரி, அஜய்யை திருமணம் செய்ய இருந்ததால் இந்த கொலை நடந்ததா? அல்லது தவறுதலாக ஆள் மாற்றி செல்லம்மாள் கொலை செய்யப்பட்டரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, செல்லம்மாளை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story