மணப்பாறை அருகே அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை


மணப்பாறை அருகே அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 5 Aug 2018 11:00 PM GMT (Updated: 5 Aug 2018 8:53 PM GMT)

மணப்பாறை அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி அருளப்பன் தெருவை சேர்ந்தவர் செபஸ்டின் புனிதன் (வயது 34). இவர் வையம்பட்டியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் கடைக்கு சென்று விட, அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்றிருந்தனர். அந்த வீட்டின் மேல் தளத்தில் ஜான் பீட்டர் தியாகராஜன் (52) என்பவர் குடியிருந்து வருகிறார். அவரும் குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருந்தார்.

நேற்று அதிகாலை இரு குடும்பத்தினரும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவுகளில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்திருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த நகை-பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. செபஸ்டின் புனிதன் வீட்டில் 6 பவுன் நகை மற்றும் ரூ.27 ஆயிரம் ரொக்கமும், ஜான் பீட்டர் தியாகராஜன் வீட்டில் ரூ.10 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல செபஸ்டின் புனிதன் வீட்டுக்கு அருகில் உள்ள முனியசாமி(52) என்பவரது வீட்டின் முதல் தளத்தில் இருந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கு வைக்கப்பட்டு இருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ.ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

அருகில் உள்ள சிறுவர் நகரில் அழகர் (35) மற்றும் எட்வின் வசந்த் குமார் (28) ஆகிய 2 பேரின் வீடுகளிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அழகர் வீட்டில் ரூ.5 ஆயிரம், எட்வின் வசந்த குமார் வீட்டில் ரூ.2 ஆயிரத்தை எடுத்துச் சென்றனர்.

அடுத்தடுத்து 5 வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், விரல் ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாள் நள்ளிரவில் அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே இதுபோன்று கொள்ளை, திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், குடும்பத்தினருடன் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும், இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தும் கொள்ளையர்களை கண்டுபிடிக்கவில்லை என்றும், இனிமேலும் காலம் தாழ்த்தாது போலீஸ் உயர் அதிகாரிகள் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story