7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் வருகிற 11-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்


7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் வருகிற 11-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2018 11:00 PM GMT (Updated: 5 Aug 2018 10:17 PM GMT)

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11-ந்தேதி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். மாநில தலைவர் மதலைமுத்து, மாநில பொருளாளர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாவட்ட தலைவர் சத்தியநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறுவதால் தற்போதுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை முடிவுறு பணித்தொகுதியாக அறிவித்து, அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் அதே பணியிடத்திலேயே 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி முதல் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 2 கட்ட போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், 3-வது கட்டமாக வருகிற 11-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, இதில் இடைநிலை ஆசிரியர்கள் திரளாக பங்கேற்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story