சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிப்பதாக புகார்: ஹீலர் பாஸ்கர், சீனிவாசனுக்கு நிபந்தனை ஜாமீன்


சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிப்பதாக புகார்: ஹீலர் பாஸ்கர், சீனிவாசனுக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 11 Aug 2018 11:15 PM GMT (Updated: 11 Aug 2018 7:31 PM GMT)

சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிப்பதாக கூறப்பட்ட புகாரில் கைதான ஹீலர் பாஸ்கர், பயிற்சி மைய மேலாளர் சீனிவாசன் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.

கோவை,

கோவையை அடுத்த கோவைப்புதூரில் ‘நிஷ்டை வாழ்வியல்’ பயிற்சி மற்றும் ஆலோசனை மையத்தை நடத்தி வந்த அறிவொளிநகரை சேர்ந்த பாஸ்கர் என்ற ஹீலர் பாஸ்கரை (45) போலீசார் கடந்த 2–ந்தேதி கைது செய்தனர். மருந்து, மாத்திரை ஏதும் இன்றி டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசில் இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) சார்பில் புகார் அளிக்கப் பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹீலர்பாஸ்கர் மற்றும் மேலாளர் சீனிவாசன்(32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் ஹீலர் பாஸ்கர் பி.இ. சிவில் என்ஜினீயரிங் பட்டதாரி என்பதும், கோவைப்புதூர் பகுதியில் பெரிய பங்களாவை மாதம் ரூ.85 ஆயிரத்துக்கு வாடகை எடுத்து இயற்கை வழி மருத்துவ முறை பற்றி பயிற்சி அளித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நோய்களுக்கு மருந்து, மாத்திரை இன்றி குணமடைய பயிற்சி அளித்ததும், அதற்காக அவர் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் தனது அறக்கட்டளைக்கு நிதி பெற்றதும் தெரிய வந்தது.

ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டதை அறிந்து, அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தினமும் அந்த பயிற்சி மையத்துக்கு வந்து பார்த்து சென்றனர். இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதால் பயிற்சி மையத்தை மூட வருவாய்த்துறைக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

இந்தநிலையில் கைதான ஹீலர் பாஸ்கர், அவருடைய மேலாளர் சீனிவாசன் ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி, கோவை 7–வது கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று நீதிபதி பாண்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டி, ஹீலர் பாஸ்கர், அவருடைய மேலாளர் சீனிவாசன் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதன்படி 30 நாட்களுக்கு கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் ஹீலர் பாஸ்கரும், மேலாளர் சீனிவாசனும் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கோவை சிறையில் இருந்து விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story